அரசியல்

அரசு வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் !

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியனை ஜூலை 6 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அரசு வேலை மோசடி வழக்கு:  முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் !
போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியனை, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில், இளஞ்செழியனை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 6-ம் தேதி வரை அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதற்கிடையே, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடைபெற்றதாகக் கூறப்படும் பண மோசடி விவகாரத்தின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அந்த சம்மனில், ஜூலை 1-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிவசங்கரிடம் நேரடியாக விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.