அரசியல்

காங்கிரஸ் குழுத் தலைவர் மாற்றம்! குளச்சல் எம்.எல்.ஏ-க்கு பதவி...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பதவியான சட்டப்பேரவை குழுத் தலைவருக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் குழுத் தலைவர் மாற்றம்! குளச்சல் எம்.எல்.ஏ-க்கு பதவி...
TN Congress Assembly New head as Tharahai Kathbert
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பதவியான சட்டப்பேரவை குழுத் தலைவருக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக தாரகை கத்பர்ட்டும், துணைத் தலைவராக மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ. ஜமால் முகமது யூனுஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சட்டப்பேரவை குழுச் செயலராக டி.டி. பிரவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவிகள், கட்சியின் தேசியத் தலைமையின் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நியமனங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழலில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை. இதையடுத்து, 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் ஆட்சிக்கு ஆதரவு அளித்தன.

தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அந்த வகையில், இதுவரை தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த ராஜேஷ்குமார் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இதன் காரணமாக, காலியாக இருந்த சட்டப்பேரவை குழுத் தலைவர் பதவிக்கு தற்போது தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் குளச்சல் தொகுதியில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட், 62,210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது, சட்டப்பேரவையில் அக்கட்சியின் செயல்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது.

புதிய பொறுப்பை ஏற்றுள்ள தாரகை கத்பர்ட், சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகள், கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் முக்கிய விவகாரங்களில் கட்சியின் குரலை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்ற உள்ளார்.

இதனிடையே, துணைத் தலைவராக ஜமால் முகமது யூனுஸ் மற்றும் செயலராக டி.டி. பிரவீன் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் குழுவின் புதிய நிர்வாக அமைப்பு முழுமையாக உருவாகியுள்ளது.