ஆன்மிகம்

பரவசமூட்டும் வைபவம்: பெருமாள் கோவில்களில் 'சொர்க்க வாசல்' திறப்பு!

தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் கோவிந்தா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

பரவசமூட்டும் வைபவம்: பெருமாள் கோவில்களில் 'சொர்க்க வாசல்' திறப்பு!
Vaikunda Ekadashi
தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் கோவிந்தா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதத்தின் மிக முக்கியமான வைணவத் திருவிழாவான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் ஆலயங்களில் இன்று (டிச. 30) அதிகாலையில் 'சொர்க்க வாசல்' திறப்பு நிகழ்ச்சி பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. "கோவிந்தா... ரங்கா..." கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பரமபத வாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசித்தனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

வழக்கமாக மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி நாளன்று வைணவ திருத்தலங்களில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (டிச. 30) சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.45 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள், ரங்கா.. ரங்கா.. கோஷம் விண்ணை முட்ட தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

திருமலை திருப்பதியில் பக்தர்கள் பரவசம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சுவாமி வழிபாடு நடந்து வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்ட பின், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அதேபோல் சொர்க்க வாசலில் விதவிதமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயிலுக்கு வெளியே அஷ்ட லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் திருப்பதி கோயிலே ஜொலிக்கிறது.

பார்த்தசாரதி கோவில் குவிந்த பக்தர்கள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல், இன்று காலை திறக்கப்பட்டது. பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார் எதிர்சேவையில் காட்சி தந்த பார்த்தசாரதி பெருமாளை, கோவிந்தா.. கோவிந்தா.. என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை இட்டி, பார்த்தசாரதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, பெருமாளை தரிசித்து சென்றனர். இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட விழா கடந்த 20 ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. பகல் 10 காலை ஆண்டாள் ரங்கமன்னார் புறப்பாடாகி பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு தமிழகத்தின் முதல் கோயிலாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு பெரிய பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பரமபத வாசல் அருகே அரையர் வியாக்ஞனமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு பெரிய பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னார் எழுந்தருளி அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயிலில், வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை பாரம்பரிய முறையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முக்கிய வைணவ திருவிழாவில், வைகுந்த லோகத்திற்குச் செல்லும் கமாக கருதப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பரமபத வாசல் தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

மதுரை, தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ திருத்தலங்களிலும், நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.