தமிழ்நாடு

குடிமகன்களே உஷார்.. மட்டையானவரிடம் ஆட்டைய போடும் கும்பல்!

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருக்கும் நபர்களிடம் ஒரு கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிமகன்களே உஷார்.. மட்டையானவரிடம் ஆட்டைய போடும் கும்பல்!
Singanallur Bus Stand
கோவை மாநகரின் சிங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஜி.வி.ரெசிடன்ஸி போன்ற உயர்தரப் பகுதிகளில் நாடோடி பெண்கள் சிலர் வீடுகளின் சுவரேறிக் குதித்துத் திருட்டில் ஈடுபட்ட விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பேருந்து நிலையப் பகுதியில் புதிய முறையிலான திருட்டுகள் அதிகரித்துள்ளன.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கியப் போக்குவரத்து முனையமாகச் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் திகழ்கிறது. இதனால் அங்கு எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும். பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால், சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டுத் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்த தவறவிடுகின்றனர்.

இவ்வாறு பேருந்தை தவறவிடும் நபர்கள், போதையின் காரணமாகப் பேருந்து நிலைய வளாகத்திலேயே தூங்கிவிடுகின்றனர். இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு புதிய கும்பல், நள்ளிரவு மற்றும் இருட்டான நேரங்களில் அங்கு மட்டையாகிக் கிடப்பவர்களைக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறது.

தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களிடம் உள்ள பணம், செல்போன் மற்றும் உடைமைகளைக் நைஸாகத் திருடிச் செல்வதை இந்த கும்பல் வழக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் இவ்வாறு தங்களது பணத்தையும் பொருட்களையும் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. போதையில் இருக்கும் பயணிகள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறை பேருந்து நிலையப் பகுதியில் இரவு நேரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.