உலகம்

”என் பேட்டரியை ரீசார்ஜ் செய்யுங்கள்”... தெருவில் கையேந்திய ரோபோ !

சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

”என் பேட்டரியை ரீசார்ஜ் செய்யுங்கள்”... தெருவில் கையேந்திய ரோபோ !
ரோபோக்களின் ஆதிக்கம் உலக நாடுகளில் அதிகமாகி விட்டது. எல்லாத்துறைகளிலும் ரோபோக்களை கொண்டு பணிகளை செய்ய தொடங்கிவிட்டனர். உலக நாடுகளில் அதிக அளவு சீனாவில் தான் ரோபோக்கள் பயன்பாடு உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Unitree என்ற நிறுவனம் தயாரித்த G1 ரக மனித உருவ ரோபோ உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது.

இந்த நிறுவனம் உருவாக்கி ரோபோ தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் "என்னுடைய பேட்டரியை ரீசார்ஜ் செய்யப் பணமில்லை. தயவுசெய்து பவர் ரீசார்ஜ் பில்களைக் கட்ட உதவுங்கள்" என ரோபோவில் உள்ள ஸ்பீக்கர் மூலம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் சிலர் வியப்புடன் பணம் போடுவதும், மொபைல் மூலம் பணம் அனுப்புவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அதன் முன்னால் பணம் போடுவதற்கான ஒரு தட்டும், டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதற்காக ஒரு QR Code-ம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விசித்திர சம்பவம் சிச்சுவானில் மட்டுமன்றி, சீனாவின் முக்கிய நகரங்களான செங்டூ, பெய்ஜிங், குவாங்சோ போன்ற பகுதிகளிலும் அரங்கேறி உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள இந்த அதிநவீன ரோபோக்கள் இப்படி வீதியில் நின்று பிச்சை எடுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.