தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. திமுக பிரமுகர் கைது!

கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் தொந்தரவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. திமுக பிரமுகர் கைது!
Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பிரின்சி (24), தனது கணவர் சூர்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி, குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தந்தையின் சந்தேகம் மற்றும் பிரேதப் பரிசோதனை

குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தந்தை சூர்யா அளித்த புகாரின் பேரில், அஞ்செட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உடலில் உள்காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இது போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

திமுக பிரமுகர் கைது

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த பிரின்சிக்கும், கோம்மைகாடு கிராமத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (40) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. பெரியநாயகம் ஜேசுராஜபுரம் திமுக இளைஞர் அணி கிளைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். பிரின்சி இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்ததும் விசாரணையில் உறுதியானது.

நீதிமன்ற நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து, பெரியநாயகத்தை அஞ்செட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர் மீது இறப்பை ஏற்படுத்தும் வகையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தர்மபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.