சினிமா

"குந்தவை-மனதில் குந்த வை"- திரிஷாவின் பதிலால் ஆவேசமான பார்த்திபன்.. முற்றிய மோதலால் பரபரக்கும் கோலிவுட்!

நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை திரிஷா இடையிலான மோதல், தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


Parthiban
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திரிஷாவின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டபோது, "குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது" எனப் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கருத்துத் தெரிவித்தார். இதற்குத் திரிஷா கண்டனம் தெரிவிக்கவே, பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், "குந்தவை-மனதில் குந்த வை" என்ற பெயரில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் வளர்ச்சி மற்றும் குடும்பச் சூழல்

அந்த வீடியோவில் பேசிய பார்த்திபன், விஜய் தற்போது பல அரசியல் தடைகளைக் கடந்து வந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். "கரூர் கூட்ட நெரிசல் பிரச்சினையில் கூட விஜய்க்கு இந்த அளவுக்கு விமர்சனங்கள் வரவில்லை. ஆனால், திரிஷாவுடன் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது அவருக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது," என்றார். மேலும், விஜய்யின் மனைவி விவாகரத்து கோரியுள்ள நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அவரே விஜய்யின் மனைவி என்றும், அந்த இடத்தில் திரிஷா ஒரு 'மூன்றாவது மனுஷி' மட்டுமே என்றும் அவர் சாடியுள்ளார்.

திரிஷாவின் ட்வீட்டும் பார்த்திபனின் பதிலடியும்

திரிஷாவுக்குத் தான் தெரிவித்த வருத்தம் மிகவும் உண்மையானது என்று குறிப்பிட்ட பார்த்திபன், ஆனால் அதற்குத் திரிஷா அளித்த பதில் தன்னை வருத்தமடையச் செய்ததாகக் கூறினார். "இப்படி ஒரு மூன்றாம் தரமான ட்வீட்டை அவர் பதிவிடுவார் எனத் தெரிந்திருந்தால், நான் வருத்தமே தெரிவித்திருக்க மாட்டேன். பொதுவெளியில் அவர் மீது எத்தனையோ விமர்சனங்கள் வரும்போது அமைதியாக இருந்தவர், எனது கருத்துக்கு மட்டும் கண்டனம் தெரிவித்தது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மைக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி

தான் யாருக்கும் அடிமையில்லை என்றும், பணம் வாங்கிக்கொண்டு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதோ அல்லது கட்சியில் சேருவதோ கிடையாது என்றும் பார்த்திபன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பெண்கள் குறித்துத் தவறாகப் பேசியதாக எழுந்த விமர்சனங்களை மறுத்த அவர், தனது கருத்தில் உள்ள உண்மையை உணர்ந்து தமக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாகத் தேவைப்பட்டால் அடுத்த வீடியோவையும் வெளியிடத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.