தமிழ்நாடு

"ஐபிஎல் மட்டும் பார்க்க முடியுதா?" மு.க.அழகிரி மகனுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

துரை தயாநிதிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Durai Dhayanidhi
ரூ.256.44 கோடி பணமோசடி வழக்கில் 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துரை தயாநிதி பக்கவாதம் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ளும் சூழலில் இல்லை என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தது மற்றும் தேர்தலில் வாக்களித்தது தொடர்பான காணொளிகளைச் சுட்டிக்காட்டி, அவரது உடல்நிலையை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியமாகும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, துரை தயாநிதியின் உடல் மற்றும் மனநிலையை புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மீண்டும் விரிவாகப் பரிசோதித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.