தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மார்ச் 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கிறோம் என்று கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில், நலவாரிய தலைவர் பொன்குமார் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இதில், ஆட்டோ நலவாரிய உறுப்பினர் ஆர்.டி.பழனி மற்றும் கட்டுமான நலவாரியத்தை சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேரில் வழங்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களின் குறைகளையும் பொன்குமார் கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுகொண்டார்.
பின்னர் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்று (மார்.14) தமிழக அரசு அறிவித்த பட்ஜெட்டில் கட்டுமான தொழிலாளர்கள் 40 வயது நிரம்பியவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து அவர்கள் சிகிச்சை பெற மருத்துவ அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 7 மாவட்டங்களில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் ஐடிஐ தொழிற் கல்வி பயில நிதி ஒதுக்கியது வரவேற்கதக்கது.
ஓய்வூதியம் தான் உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். அது இன்னும் பரிசீலனையில் உள்ள நிலையில், வரும் 9 ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது தொழிலாளர்களுக்கு பயனுள்ள நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கிறோம். கட்டுமான நலவாரியத்தில் 37 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ரூ.250 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் எந்த நலத்திட்டமும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. நலவாரியத்தில் ரூ.6700 கோடி நிதி இருப்பில் உள்ளது யார் கட்டிடம் கட்டினாலும், இந்த நலவாரியத்திற்கு ஒரு சதவிகிதம் வரி வழங்க வேண்டுமென அறிவித்து வசூலிக்கபடுகிறது. ஆனால், மத்திய அரசு திட்டங்களுக்கு பொருந்தாது என்று கூறினார்
LIVE 24 X 7









