விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: Unsold ஆன ஆஸ்திரேலிய கேப்டன்!

ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலியை மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: Unsold ஆன ஆஸ்திரேலிய கேப்டன்!
Alyssa Healy goes unsold
ஐந்து அணிகள் பங்கேற்கும் 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது. மொத்தம் 277 வீராங்கனைகள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், இதில் 73 பேர் அணிகளுக்குத் தேவைப்பட்டனர்.

அதிக விலைக்குப் போன நட்சத்திர வீரர்கள்

ஏலத்தில் அதிக விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில், இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா அதிக விலைக்கு ஏலம் போனார். அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த தீப்தி சர்மாவை, ரூ. 3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணி வாங்கியது.

இதேபோல, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங் ரூ.1.9 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் ரூ.85 லட்சத்திற்கு உபி வாரியர்ஸ் அணிக்குச் சென்றார். வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க் உள்ளிட்டோரும் ஏலத்தில் அதிக விலைக்குப் போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Unsold ஆன அலிசா ஹீலி

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, நட்சத்திர ஆஸ்திரேலிய வீராங்கனையும், ஆஸ்திரேலியா அணியை ஆறு முறை உலகக் கோப்பை வெல்ல வைத்த கேப்டனுமான அலிசா ஹீலியை எந்த அணியும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் ஏலத்தில் விலை போகவில்லை. ஜாம்பவான் வீராங்கனையான அவரை எந்த அணியும் ஏலம் எடுக்காதது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.