இந்தியா

எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு.. தொடங்கிய முதல் நாளே ஒத்திவைக்கப்பட்ட மக்களவை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு.. தொடங்கிய முதல் நாளே ஒத்திவைக்கப்பட்ட மக்களவை!
Parliament adjourned
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 1) தொடங்கிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் நீக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மக்களவையில் அமளி மற்றும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. மக்களவையில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்தக் கோரிக்கையை மக்களவைத் தலைவர் ஏற்க மறுத்தார். இதனால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அமளியைத் தொடர்ந்து, மக்களவையை முதலில் பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். தொடர்ந்து பகல் 12 மணிக்கு அவை கூடிய நிலையிலும், எதிர்க்கட்சியினர் அமளியைத் தொடர்ந்ததால், மக்களவை மீண்டும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.