சினிமா

'கும்கி 2' பட வெளியீட்டிற்கு அனுமதி: இயக்குநர் பிரபு சாலமனுக்கு உயர் நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

'கும்கி 2' திரைப்படத்தை வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

'கும்கி 2' பட வெளியீட்டிற்கு அனுமதி: இயக்குநர் பிரபு சாலமனுக்கு உயர் நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!
Permission for release of Kumki 2
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் தயாரான 'கும்கி 2' திரைப்படத்தை வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. எனினும், பட வெளியீட்டிற்கு எதிரான நிதிப் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, இயக்குநர் பிரபு சாலமன் ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பட வெளியீட்டிற்குத் தடை கோரிய வழக்கு

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' திரைப்படம் 2012-ஆம் ஆண்டு வெளியானது. இதைத் தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'கும்கி 2' திரைப்படம் தயாராகி இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

'கும்கி 2' படத்தை உருவாக்க, இயக்குநர் பிரபு சாலமன் 2018-ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் ரூ.1 கோடியே 50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் சேர்த்து ரூ.2 கோடியே 50 லட்சம் ரூபாயைத் திருப்பித் தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிச் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 12-ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவு

இந்தத் தடையை நீக்கக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான பென் இந்தியா நிறுவனம் சார்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, படத்தின் தயாரிப்பாளர் பென் இந்தியா நிறுவனம் தான் என்றும், தணிக்கைச் சான்றும் தங்கள் பெயரில்தான் உள்ளது என்றும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிரபு சாலமன் படத்தின் இயக்குநர் மட்டுமே என்றும், அவர் வாங்கிய கடனுக்கு பென் இந்தியா பொறுப்பேற்க முடியாது என்றும் கூறி, தடையை நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'கும்கி 2' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட அனுமதித்து உத்தரவிட்டார். அதேசமயம், கடன் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, ரூ.1 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தும்படி இயக்குநர் பிரபு சாலமனுக்கு அவர் உத்தரவிட்டார்.