சினிமா

ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.. நாளை விசாரணை!

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.. நாளை விசாரணை!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் வழங்காததால் திட்டமிட்டபடி ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவில்லை. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தடையை எதிர்த்துப் படத் தயாரிப்பு நிறுவனம் தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

தொடரும் தணிக்கைச் சர்ச்சை

'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியபோது, அதில் அதிக அளவிலான ரத்தக் காட்சிகள் மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதாகக் கூறி, படம் மறு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத் தடை மற்றும் உச்ச நீதிமன்ற மேல்முறையீடு

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராகத் தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்ததுடன், வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த 'ஜனநாயகன்' படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு எதிராகப் படத் தயாரிப்பு நிறுவனம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 10) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு அவசர வழக்காக நாளை (ஜனவரி 13) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் நாளை படத்திற்குச் சாதகமாக உத்தரவு பிறப்பித்தால், பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15) 'ஜனநாயகன்' திரைப்படத்தை உடனடியாக வெளியிடப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.