வழக்கின் பின்னணி:
காஞ்சிபுரம் பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள்மீது பெங்களுரு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை ரூ.120 கோடிக்கு ஏமாற்றியதாகப் பெங்களுரூ சிபிஐயில் புகார் கூறப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பெங்களூரு சிபிஐ கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்தது. பெங்களுரூ சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை, திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் இது தொடர்பாகச் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. 2020-ஆம் ஆண்டில் வருமானவரித் துறை அளித்த அறிக்கை அடிப்படையில் 2017 நவம்பரில் சசிகலா மற்றும் பிறரின் சொத்துக்களில் பினாமி சட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளின்போது, குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணையின் முக்கிய அம்சங்கள்:
பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி விவகாரங்களை நிர்வகித்து வந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல், அளித்த வாக்குமூலத்தில், காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையை விற்பனை செய்வதற்காக மொத்தமாக ரூ.450 கோடியைப் பழைய ரூபாய் நோட்டுகளாகப் பெற்றதாகவும், அதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தனது தந்தையான ஷிவ்கன் படேல் மற்றும் அவரது சகோதரர் தினேஷ் படேல் ஆகியோருடன் இணைந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வருமான வரித் துறை அந்தச் சர்க்கரை ஆலையைப் பினாமி சொத்து என்று அறிவித்து, சசிகலாவை அதன் உண்மையான உரிமையாளராகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களுரு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சர்க்கரை ஆலைக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணையில், பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனம் கடன் மோசடி செய்து விட்டதாகத் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட், அதன் இயக்குநர்களான ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தினேஷ் ஷிவ்கன் படேல், தம்பூராஜ் ராஜேந்திரன், பாண்டிய ராஜ் மற்றும் தலைமை நிதி அதிகாரி வெங்கட பெருமாள் முரளி ஆகியோரை குற்றவாளிகளாகப் சேர்த்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியான கடன் பெற்றது, சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியது, வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மற்ற நிறுவனங்களுக்குத் திசை திருப்பியது, தொடர்புடைய நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்றியது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கியது, மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்டவை எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும், கடன் வாங்கிய பணத்தின் இறுதிப் பயன்பாட்டை மறைக்க, போலி அல்லது பினாமி நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்றியதாகவும் சிபிஐ சந்தேகிக்கிறது. இந்த வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ளதால், சசிகலா சிபிஐ விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
LIVE 24 X 7









