கதாநாயகிகளை தேர்வு செய்யும் பொழுது கதைக்கு ஏற்றார் போலவும், கதையை உணர்வுபூர்வமாக உள்வாங்கும் வாலிபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் இயக்குநர் மணி ரத்னம் தெரிவித்துள்ளார்.
ஊட்டி நூலக திருவிழா 14 மற்றும் 15 ஆகிய தினங்கள் மிக விமர்சியாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் படுகர் நடனத்துடன் துவங்கப்பட்ட இந்த விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நிலையில், இன்று காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்துடன் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணி ரத்னத்தின் சினிமா பயணம், கதை சொல்லும் அணுகுமுறை, அவருடைய படங்களில் கலாச்சார தாக்கம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் திரைத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஒரு முக்கியமான அமர்வாக அமைந்தது.
மேலும் அவர் கலந்துரையாடுகையில், என்னுடைய படங்களில் பாடல்களில் இயற்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்த சூரிய உதயம், காற்று ஆகியவை உணர்வுபூர்வமாக இருக்கும். கதாநாயகிகளை தேர்வு செய்யும் பொழுது கதைக்கு ஏற்றார் போலவும், கதையை உணர்வுபூர்வமாக உள்வாங்கும் வாலிபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாயகன், தளபதி ஆகிய உணர்வுபூர்வமான திரைப்படங்களையும் பொன்னியின் செல்வன் போன்ற புராணக் கதைகளையும் எவ்வாறு வேறுபடுத்தி பார்க்கிறீர்கள் என கேட்ட பொழுது நாயகன், தளபதி போன்ற படங்கள் அந்த காலகட்டத்திற்கு ஏற்றார்போல உருவாக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை அந்தக் கதையை முழுவதுமாக கொண்டுவரவே முயற்சித்துள்ளோம். முடிந்த அளவிற்கு அதனை மக்களுக்கு எடுத்துச் சென்றுள்ளோம் எனவும் தெரிவித்தார்.மேலும் இந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பல்வேறு தரப்பினருக்கும், அவருடைய திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இறுதியாக பள்ளி படிக்கும் மாணவி எனக்கு திரைத்துறையில் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளது எவ்வாறு பயணிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய பொழுது, நீங்கள் உணர்வுபூர்வமாக அதன் மீது ஆர்வம் கொண்டாள் கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
அதன் பின்னர் வெளிப்பகுதியில் உள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டும், அவருடைய புத்தகத்திற்கு அவருடைய கையொப்பத்தை பதித்தும் அனைவருக்கும் வழங்கினார். மலை மாவட்டத்தில் இயற்கை ரசித்தபடியும் திரைத்துறையில் உச்சத்தில் உள்ள இயக்குநர்களுடன் ஏற்பட்ட இந்த நிகழ்வு சுவாரசியமாகவே அமைந்தது.
LIVE 24 X 7









