இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 'புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்தார். நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் காண்பதற்காக அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் இளம் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இவரது எட்டு வயது மகன் தலையில் படுகாயங்களுடன் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, தெலுங்கானா சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன், ரோட் ஷோ நடத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தான் இளம்பெண் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அல்லு அர்ஜுன், தனக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், கூட்டத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து அடுத்த நாள் தான் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த தகவலை தெரிவித்தும் நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளிவரவில்லை என சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் ஹைதராபாத் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அதாவது, பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் தெரிவிக்க சென்றபோது திரையரங்க நிர்வாகம் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மூத்த அதிகாரிகளை அனுமதிக்க மறுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
தொடர்ந்து அல்லு அர்ஜுனின் மேலாளர் மூலம் சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அவர் திரையரங்கை விட்டு வெளியேற மறுத்ததாகவும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திரையரங்கிற்குள் சென்று, அவரிடம் நிலவரத்தை கூறியபோது அவர் படம் முடிந்து செல்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து வலுகட்டாயமாக நள்ளிரவு 12 மணி அளவில், அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளியேற்றப்பட்டதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணிற்கு நீதி கேட்டு அல்லு அர்ஜுன் வீட்டின் முன் குவிந்த உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு போராட்ட குழுவினர், அங்கிருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும், வீட்டின் மீது தக்காளிகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். “ரேவதி குடும்பத்திடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
LIVE 24 X 7









