இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் சார்பில் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
சொன்னதை செய்தார் இயக்குநர்: அதர்வா
நடிகர் அதர்வா முரளி பேசுகையில், '' டி.என்.ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு விழாவில் கலந்து கொண்ட உணர்வே மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும்? எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும்? யாருக்கு பிடிக்கும்? என்றெல்லாம் யோசிக்கவில்லை.
படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்த படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது.. படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பை தெரிவித்த போது.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ஊடகத்தினர் அனைவரும் ஊக்கமளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்தனர். அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. 'வேர்ட் ஆஃப் மவுத்' என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு படத்தை பாராட்டினார். இந்த படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாக கொண்டாடினார்கள். இதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன். இயக்குநர் நெல்சன் என்னை சந்தித்து இப்படத்தை பற்றி சொன்னபோது, 'உங்களுடைய திரையுலக பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்' என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்- ஒளிப்பதிவாளர் -இசையமைப்பாளர்கள் - பின்னணி இசையமைப்பாளர் - என தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நிம்மதியாக உறங்கினேன்: நடிகை நிமிஷா சஜயன்
நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில், ''பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது இந்த படம் ஹிட் ஆகுமா? ஹிட்டாகாதா? என்ற பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட பிறகு கிடைத்த விமர்சனத்தால் படம் வெளியான தருணத்தில் நான் எந்த வித பதட்டமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன்.
இருந்தாலும் இரண்டு மணி அளவில் இயக்குநர் நெல்சன் போன் செய்து படம் வெற்றி என சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
LIVE 24 X 7









