Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஆசை தந்தை படுகொலை.. 12 ஆண்டுகளுக்குப் பின் பழிதீர்த்த மகன்!

By Christon
07 Aug 2025, 11:31 AM
சென்னை டி.பி.சத்திரம் பகுதியில், தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியில், தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பிரமுகர் கொலை

சென்னையில் ரவுடியாக வலம் வந்த ராஜ்குமார் என்ற புல்கான் (42), கடந்த 5 வருடங்களாக எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாமல், பந்தல் அமைக்கும் தொழில் மற்றும் கட்டிட கான்ட்ராக்டராக வேலை செய்து வந்துள்ளார். அ.தி.மு.க. பிரமுகரான இவர் மீது 9 வழக்குகள் உள்ளன.

நேற்று இரவு, ராஜ்குமார் தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தபோது, தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம கும்பல் அவரை விரட்டியுள்ளது. உயிருக்குப் பயந்து வின்சென்ட் என்பவர் வீட்டிற்குள் ராஜ்குமார் பதுங்கியுள்ளார். ஆனால், அந்தக் கும்பல் வீட்டிற்குள் புகுந்து, வின்சென்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்முன்னேயே ராஜ்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது.

தந்தை கொலைக்கு பழிதீர்த்த மாணவன்

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவன் யுவனேஷ் (19), ஒரு 17 வயது சிறுவன் மற்றும் சாய்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், இந்தச் கொலையின் பின்னணி தெரியவந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு யுவனேஷ் தந்தை செந்தில்குமாரை ரவுடி ராஜ்குமார் கொலை செய்துள்ளார். அதற்குப் பழிவாங்கும் நோக்கில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு யுவனேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜ்குமாரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்தச் கொலை வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக உள்ள மேலும் சில ரவுடிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.