தமிழ்நாடு

யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிஜிபி அலுவலகத்தில் புகார்

By Jayakumar
19 Sep 2025, 02:16 PM
நடிகை விஜயலட்சுமி- சீமான் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி டிஜிபி அலுவலகத்தில் புகார்
யூடியூப்பர் சவுக்கு சங்கரை கைது செய்யக்கோரி தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி போலீஸ் டிஜிபியிடம் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

டிஜிபி அலுவலகத்தில் புகார்

புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யூடியூப்பர் சவுக்கு சங்கர் தமிழ்நாட்டு பெண்கள் குறித்தும், அரசு பெண் ஊழியர்கள் குறித்து தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார். இது தொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று டிஜிபியை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளேன்.

ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமினில் தான் வெளியில் வந்துள்ளார். ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி பெண்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார். நடிகை விஜயலட்சுமி - சீமான் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

ரூ.10 கோடி சொத்து வாங்கி இருக்கிறார்

ஆனால் அவர் மீது நான் ஆதாரத்தோடு குற்றம் சாட்டுகிறேன். அவர் ரூ.10 கோடி சொத்து வாங்கி இருக்கிறார். சவுக்கு சங்கர் போதைப்பொருளை பயன்டுத்திகொண்டு உளறி வருகிறார். அவர் மீது நான் ஏற்கனவே வருமானவரித்துறையிடம் புகார் அளித்துள்ளேன். இனிமேலும் இதுபோல அவதூறு பேசினால் சட்டப்படி பேச மாட்டேன்" என்று தெரிவித்தார்.