உலகம்

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: மசோதா நிறைவேற்றப்படாததால் பெரும் பரபரப்பு!

By VASUKI
01 Oct 2025, 07:14 PM
புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக, அமெரிக்க அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. இன்றிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மசோதா முடக்கத்திற்குக் காரணம் என்ன?

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் புதிய நிதி மசோதாவை அறிமுகம் செய்தது. இந்தப் புதிய மசோதாவில், பழைய திட்டங்களைக் குறைத்து புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட 60 சதவீத வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், ஆதரவாக 55 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இந்த மசோதாவுக்கு மறுப்பு தெரிவித்ததால், மசோதாவை இயற்ற மேலும் எட்டு வாக்குகளைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜனநாயக கட்சியின் நிபந்தனை

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஜனநாயக கட்சி, புதிய மசோதாவுக்கு ஆதரவளிக்க ஒரு நிபந்தனையை விதித்தது. அதாவது, டிரம்பின் சுகாதாரத் திட்டங்கள் தொடர்பான மருத்துவக் காப்பீட்டு சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது. இந்த நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், புதிய மசோதா நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, அரசு செலவினங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.

முடக்கத்தின் விளைவுகள்

அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து, சிறு வணிகக் கடன் அலுவலகங்கள் (Small Business Loan Offices) உள்ளிட்ட பல முக்கிய அரசுச் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவின்மையால் அரசு செலவினங்களுக்கான நிதி சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.