தமிழ்நாடு

ரயில் படிக்கட்டில் காலை நீட்டி பயணம்.. கால் துண்டாகி மரணித்த பரிதாப இளைஞர்

By leninakathiya
03 Oct 2024, 05:27 PM
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியை சேர்ந்த 24 வயதான பாலமுருகன். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவில்லா பெட்டி படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.

அப்போது அந்த ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த நிலையில், கால் நடைமேடையில் மோதி இடறி கீழே விழுந்துள்ளார். இதனால், சிறிது தூரம் ரயில் இழுத்துச் சென்றதால், ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உடனடியாக பணியில் இருந்த மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் சடலமாக மீட்கப்பட்ட பாலமுருகனின் உடலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் காலை நீட்டிக்கொண்டு பயணம் செய்யும்போது கீழே சுழண்டு விழுந்து பலியான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.