தமிழ்நாடு

ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம்- எடப்பாடி பழனிசாமி

By Jayakumar
15 Aug 2025, 06:28 AM
கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்

அதன் தொடர்ச்சியாக இன்று இரவு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பொதுமக்களிடையே திறந்த வாகனத்தில் நின்று பேசிய எடப்பாடி பழனிசாமி, “வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெசவாளர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியாகும்.இந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்காகத் திமுக ஆட்சியில் எந்த ஒரு நல திட்டமும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் நெசவாளர்களின் நலனைக் கருதி தேங்கியிருந்த துணிகளை விற்பனை செய்வதற்காக 300 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. கைத்தறி விற்பனையை அதிகரிக்க ஜவுளி கொள்கை வெளியிடப்பட்டது.ஆனால் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு பல துறைகளில் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது இதன்காரணமாகத் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன்

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மக்கள் அதிக அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது.கொரோனா காலத்தில் அதிமுக அரசே சிறப்பாகச் செயல்பட்டதால் தமிழகத்தை பின்பற்ற வேண்டும் என மற்ற மாநிலங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அந்த அளவிற்கு அதிமுக சிறப்பாக ஆட்சி செய்தது.

திமுகவின் நான்காண்டு ஆட்சியில் இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. இன்னும் உள்ள எட்டு மாதங்களில் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிவிடும். ஆக மொத்தம் ஐந்து ஆண்டுகளில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது.

ஊழலில் முதல் மாநிலம்

அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்காக என்ன செய்தது என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை சாலைப்போக்குவரத்து, மின்சாரம்,உயர்கல்வி என பல துறைகளில் தேசிய அளவில் பல விருதுகள் வாங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித்துறையில் மட்டும் 146 தேசிய விருதுகள் தமிழகம் பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்து சாதனை படைத்தது. தமிழகத்திற்கு பல துறைகளில் வருவாய் வந்தபோதிலும் வரிகள் உயர்த்தப்பட்டது. எனவே திமுக அரசு ஊழலிலும் கடன் வாங்குவதிலும் முதன்மை மாநிலமாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.