சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி சங்கீதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வேறொருவருடன் சென்று விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 வது மகள் நந்தினி (17) 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அமர்நாத் 2வதாக உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். உஷா மாற்றுத்திறனாளி என்பதால் நந்தினியை வீட்டு வேலை செய்யும்படி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நந்தினி நேற்றிரவு வீட்டில் தனக்கு தானே துப்பட்டாவால் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் நிர்மல்குமார் கீழே இறக்கி பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வரும் வழியிலேயே நந்தினி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சென்ற ஓட்டேரி போலீசார் நந்தினி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் அமர்நாத், அவரது மனைவி நந்தினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தினி கழுத்தில் காயங்கள் உள்ளதாக தகவல் வெளியானதால் மருத்துவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் உஷாவிடம் விசாரணை நடத்தினர். தகவலை அறிந்த நந்தினியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உஷா நந்தினியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.
சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில். சிறுமி நந்தினியை அவரது சித்தி உஷா கொடுமைப்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
வீட்டு வேலைகள், துணி துவைப்பது மற்றும் அனைத்து வேலைகளையும் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், குறிப்பாக உஷாவின் மாதவிடாய் ஆன துணிகளையும் துவைக்கும் படி கட்டாயப்படுத்தி கையால் தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் சிறுமி நந்தினி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமி நந்தினியின் சித்தி உஷா மற்றும் அவரை கண்டித்து சிறுமியை காக்க தவறிய அவரது தந்தை அமர்நாத் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.