Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

By leninakathiya
02 Oct 2024, 08:51 PM
புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ அருகே சங்கர் - ஜனனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சங்கர் வளசரவாக்கத்தில் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சுப நிகழ்ச்சிக்கு ஒன்றுகாக கிளம்புவதற்காக பீரோவில் இருந்த நகையை பார்த்தபோது அதில் 40 சவரன் நகை திருடு போயிருப்பதை கண்டு கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டில் வேலை செய்த திலகவதி என்ற பெண்ணிடமும் தனது வீட்டிற்கு யோகா கிளாஸ் எடுப்பதற்காக வரும் காயத்ரி என்ற யோகா மாஸ்டர் ஆகிய இருவரிடமும் விசாரித்த போது நாங்கள் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து, ஜனனியும், சங்கரும் கே.கே.நகர் காவல் நிலையத்தில் தங்கள் வீட்டில் பணிபுரிந்து வரும் திலகவதி மற்றும் தங்களது வீட்டிற்கு வரும் யோகா மாஸ்டர் காயத்ரி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கேகே நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர், சங்கரிடம் புகார் குறித்து விசாரிப்பதற்காக ரூபாய் 20,000 பணம் GPay-ல் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர், விசாரணை குறித்து கேட்டறிவதற்காக காவல் நிலையம் சென்றபோது உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் சரியான முறையில் பதில் சொல்லாமல் இருந்ததால், சங்கர் காவல் ஆணையரகம் சென்று புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல் உதவியாளர் ராஜேந்திரன் மீண்டும் Gpay மூலமாக சங்கரிடம் வாங்கிய ரூபாய் 20,000 பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். மேலும், தனது வீட்டில் 40 சவரன் நகை திருடு போனது குறித்தும் அதனை விசாரிப்பதற்காக காவல் உதவியாளர் ராஜேந்திரன் தன்னிடமிருந்து ரூபாய் ₹20,000 பணம் வாங்கியதாகவும் சங்கர் தி.நகர் காவல் துணை ஆணையரிடம் நேற்று மாலை புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து வடபழனி உதவி ஆணையரிடம் விசாரணை நடத்துமாறு தி.நகர் துணை ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் வடபழனி உதவி ஆணையர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைத்தி வருகின்றனர்.