தமிழ்நாடு

புகார் மீது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு-துணை ஆணையரை விடுவித்து உத்தரவு

By Jayakumar
14 Jul 2025, 06:10 PM
கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு
சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக பொறுப்பு வகித்த அதிவீரபாண்டியன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதில் கோயம்பேடு துணை ஆணையர் சுஜித் குமார் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண் குற்றச்சாட்டு

காதல் விவகாரத்தில் இரு தரப்பு குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில், இது தொடர்பான புகார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த பிரச்சனையில் பெண்ணின் புகைப்படத்தை எதிர்வீட்டார் ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், இது தொடர்பாக கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டு, துணை ஆணையர் அதிவீரபாண்டியன் குறித்தும் குற்றஞ்சாட்டி பிரச்சனை செய்தார்.


துணை ஆணையர் மாற்றம்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே திருமலா பால் மேலாளர் தற்கொலை வழக்கு சர்ச்சையாகி கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.ஒரே வாரத்தில் சென்னையில் இரண்டு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.