தமிழ்நாடு

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

By VASUKI
03 Sep 2025, 07:49 PM
கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் கென்னடி ஸ்கொயர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (24). இவரது தந்தை கண்ணன். நேற்று முன்தினம், கண்ணனின் சகோதரி மஞ்சுளா உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கு கொளத்தூர் சுடுகாட்டில் நடைபெற்றது.

மதுபோதையில் நடந்த தகராறு

இறுதிச் சடங்கின்போது, மதுபோதையில் இருந்த அரவிந்தனின் தந்தை கண்ணன், அங்கிருந்த வெட்டியானிடம் தனது சகோதரியின் காலில் இருந்த மெட்டியை கழட்டித் தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மஞ்சுளாவின் இரண்டாவது மகனான கிருபாகரன் மற்றும் அவரது நண்பர்கள், கண்ணனை இறுதிச் சடங்கிலிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கிருந்த அரவிந்தன், தனது தந்தையை ஏன் வெளியேற்றுகிறீர்கள் எனத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கிருபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அரவிந்தனைத் தாக்கியதாகத் தெரிகிறது.

தாக்குதலில் மயங்கி விழுந்த அரவிந்தனை உறவினர்கள் உடனடியாகப் பெரியார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அரவிந்தன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் கதறல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் திருக்குறள் கூறி பரிசுப் பெற்றவர் அரவிந்தன் எனவும், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்தது அதிர்ச்சியளிப்பதாகவும் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். " கீழே விழுந்த எனது தம்பியை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அப்படி மீட்டு இருந்தால் என் தம்பி உயிரோடு இருந்திருப்பான்" என அவர்கள் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிக நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள கிருபாகரன் மற்றும் அவரது நண்பர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம்குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அரவிந்தன் தாக்குதலில் இறந்தாரா என்பது உறுதியாகும் என்று தெரிவித்துள்ளனர்.