தமிழ்நாடு

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகள் அவதி!

By VASUKI
23 May 2025, 06:38 AM
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீர் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து செல்லும் சரக்கு ரயில் திடீரென அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்திற்கு விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் விரைவில் கடம்பதூரில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போல சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற லால்பாக் விரைவு ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரக்கோணம் வழியாக காட்பாடி திருப்பதி வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தின் மீது நிலை நிறுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சரக்கு ரயில் ஆனது அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.