Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கொலையில் முடிந்த போலீஸ் பிராங்க்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

By MUTHUKRISHNAN
11 Jul 2025, 04:07 PM
நண்பர்களிடையே விளையாட்டாய் செய்த பிராங்க் சம்பவத்தின் தொடர்ச்சியால் ஏற்பட்ட பகையின் காரணமாக 18 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதான இளைஞர் அரசு. போலீஸ் வாக்கிடாக்கி சத்தத்துடன் மிமிக்ரியில் ஈடுபட்ட நண்பரின் பிராங்க் செயல், கொலை சம்பவத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது பள்ளிக்கால நண்பனின் பெயர் அழகுபாண்டி. ஒருநாள், அரசு வீட்டில் இருந்தபோது, அழகுபாண்டி வேறொரு எண் மூலமாக போனில் அழைத்துள்ளார். அப்போது, போலீஸ் வாக்கிடாக்கி சத்தத்துடன் மிமிக்ரி செய்து, போலீஸ் போல நடித்து அரசிடமும் அவரது தாயாரிடமும் பேசியுள்ளார்.

"உங்க பையனை ஒழுங்கா இருக்க சொல்லுங்க, அவன் ரொம்ப சேட்டை பண்றான், கவனமா இருக்க சொல்லுங்க" என்று அந்த அழைப்பில் பேசியுள்ளனர். இதைக் கேட்டு அரசும் அவரது குடும்பத்தினரும் பயத்தில் இருந்துள்ளனர்.

சில நாட்கள் கழித்து, வாக்கிடாக்கி சத்தத்துடன் பேசி மிரட்டியது அழகுபாண்டி தான் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், இரு குடும்பத்தினரும் பேசி சமாதானம் அடைந்த நிலையில் பிரச்னை கட்டுக்குள் வந்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு அழகுபாண்டியும் அரசும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

கொலையில் முடிந்த பிராங்க்:

இந்நிலையில், சமீபத்தில் அரசு, அழகுபாண்டியின் அண்ணன் செல்லபாண்டியை முறைத்துப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. தனது தம்பி அழகுபாண்டியை அரசு ஏதாவது செய்து விடுவாரோ? என நினைத்த செல்லபாண்டி, நேற்று நள்ளிரவு அரசின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், கதவை எட்டி உதைத்துள்ளார் செல்லபாண்டி. அப்போது, அரசின் தாயார் கதவைத் திறந்ததும், கத்தியுடன் வந்த செல்லபாண்டி, வீட்டிற்குள் இருந்த அரசின் கழுத்தில் குத்தியுள்ளார். அரசின் தாயாரும், தங்கையும் கூச்சலிட்டபடி செல்லபாண்டியை தடுக்க முயன்றபோது, அவர்களையும் தாக்க முயன்றதால், அரசு தன் தாய் மற்றும் சகோதரியை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது மீண்டும் செல்லபாண்டி கத்தியால் குத்திவிட்டு வாசலில் இறங்கி தப்பியோடிய போது, அவரைத் துரத்திப் பிடிப்பதற்காக ஓடிய அரசு, அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் அரசின் உடலை கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அரசுவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய அழகுபாண்டியின் அண்ணன் செல்லபாண்டியை தேடி வருகின்றனர்.

மதுரையில் போலீஸ் போல பேசி தனது நண்பனிடம் பிராங்க் செய்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்னையில், ஒரு அப்பாவி இளைஞர் பரிதாபமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.