Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கு.. காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By VASUKI
21 Dec 2024, 12:26 PM
தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம். பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம். பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் நடந்த மக்களவைத் தேர்தலின் போது, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனி,  கமுதி பகுதியில், மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத வாகனத்தில் பிரச்சாரம் செய்ததாக, கமுதி போலீசார், தேர்தல் விதிமீறல் வழக்கை பதிவு செய்திருந்தனர். 

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி. நவாஸ் கனி உள்ளிட்ட ஏழு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். 

அந்த மனுவில், எந்த குற்றமும் செய்யாத நிலையில், அரசியல் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ஜனவரி 27 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.