தமிழ்நாடு

அதிமுக மீது சவாரி செய்ய தான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது- திருமாவளவன்

By Jayakumar
12 Apr 2025, 12:40 PM
கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் செயல் திட்டம்

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் பாஜக ஒரு பெரிய கட்சி போல் காண்பித்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில், பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவர்களின் கொள்கையை சொல்லி தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதனால் இரண்டு திராவிட கட்சிகளில் ஒரு கட்சியை தோழமைக் கட்சி என்ற பெயரில் அரவணைத்து அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதுதான் உண்மையான செயல் திட்டம்.

அந்த சதிவலையில் அதிமுக சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் ஒன்று சேரப்போவதில்லை என்ற முடிவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே எடுத்தார். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் பாஜக அல்லாத ஒரு கூட்டணி அமைத்து, திமுக கூட்டணியை எதிர்கொள்ள வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு அவரோடு இருக்கும் முன்னணி தலைவர்களே முழுமையான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. அவரின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று தான் தெரிகிறது.

அதிமுகவிற்கு எந்த பயனும் இல்லை

பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அரை மனதோடு தான் இந்த கூட்டணியை அமைத்திருக்க முடியும் என நான் கருதுகிறேன். பாஜக தனித்து நிற்க முடியாது. தனித்து நின்றால் தமிழ்நாட்டில் ஒரு சக்தியே இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தி விடுவார்கள். ஆகவே அதிமுகவை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு கூடுதலான இடங்களில் போட்டியிட்டு அதிமுக வாக்கு வங்கியை பாஜக வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு இந்த யுக்தியை பாஜக கையாளுகிறது. இதனால் அதிமுகவிற்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. பாஜக ஒரு அரசியல் சக்தி என்று காட்டிக்கொள்வதற்கு இந்த களம் அவர்களுக்கு பயன்படும்.

இபிஎஸ் மனப்பூர்வமாக இந்த கூட்டணியை உருவாக்கவில்லை.இந்த கூட்டணியில் அவருக்கு உடன்பாடு என்று தான் கருதுகிறேன். டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை ஆர்எஸ்எஸ் சார்ந்தவர்கள் திரைமறைவில் முயற்சிகளை மேற்கொண்டார்கள் என நான் கேள்விப்பட்டேன்.அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை. அதன் பிறகு உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்ற வாக்குறுதியை கொடுத்த பின்புதான், எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணிக்கு ஒத்துக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி இந்த நிபந்தனையை முன்வைத்து தான் பாஜகவை பணியவைத்து இருக்கிறார் என தெரிகிறது.


தலைவர்களுடன் களப்பணி

நயினார் நாகேந்திரன் அதிமுக தொண்டராக இருந்து தமிழ்நாட்டில் அறியப்பட்டவர். அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக களப்பணி ஆற்றியவர். ஆகவே அதிமுகவிற்கு ஒத்துழைப்பாக இருக்கும் என பாஜகவினர் நினைத்திருக்கலாம். மேலும் அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார். அவர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார். ஆகவே அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை” என தெரிவித்தார்.