Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நோயாளியின் தங்க சங்கிலியை விழுங்கிய ஊழியர்.. ‘இனிமா’ கொடுத்து மீட்ட மருத்துவர்கள்!

By Christon
26 Aug 2025, 05:01 PM
நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து விழுங்கிய ஊழியருக்கு இனிமா' கொடுத்து நகையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து விழுங்கிய ஊழியருக்கு, போலீசார் 'இனிமா' கொடுத்து நகையை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோயாளியிடம் நகை பறிப்பு

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 79 வயதான மூதாட்டி சுப்பம்மாள், உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த மருத்துவமனையில் ஊழியராகப் பணிபுரியும் குறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமர் (25) என்பவர், மூதாட்டி சுப்பம்மாள் இருந்த வார்டுக்குள் வந்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துள்ளார்.

நகையை விழுங்கிய ஊழியர்

சங்கிலியை இழந்த அதிர்ச்சியில் சுப்பம்மாள் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக நோயாளிகளும், ஊழியர்களும் வருவதற்குள் ராமர் அங்கிருந்து ஓடி, அருகில் இருந்த கழிவறைக்குள் புகுந்து தாழிட்டுக்கொண்டார். பின்னர், மருத்துவமனை ஊழியர்களும் உறவினர்களும் கதவைச் சூழ்ந்துகொண்டு ராமரை வெளியே வருமாறு அழைத்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த ராமர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க, நகையை தான் விழுங்கிவிட்டதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

‘இனிமா’ கொடுத்து நகை மீட்பு

இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமரை அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவர் நகையை விழுங்கியதாகக் கூறியதால், அவரை மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்களின் உதவியுடன் ராமருக்கு 'இனிமா' மருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில், அவர் விழுங்கிய 5 பவுன் தங்கச் சங்கிலி வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து, ராமரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார், அதனை மூதாட்டி சுப்பம்மாளிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.