இந்தியா

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

By Christon
10 Nov 2025, 04:58 PM
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது மூன்று குழந்தைகள் கண் எதிரே மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த நபர் தனது மூன்று குழந்தைகள் கண் எதிரே மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

பொகாரோ மாவட்டத்தின் பெர்மோ வட்டாரத்தில் உள்ள நயா பஸ்தி என்ற இடத்தில் ரூபேஷ் - ஜலோ தேவி தம்பதி வசித்து வந்துள்ளனர். கவன - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (நவ.10) அதிகாலை 3 மணியளவில் ரூபேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி ஜலோ தேவி ஆகியோருக்கு இடையே சில குடும்பப் பிரச்சினைகள் காரணமாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் கண் முன்னே நடந்த கொலை

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ரூபேஷ் யாதவ், தனது மனைவி ஜலோ தேவியை சுத்தியலால் தாக்கியதுடன், பின்னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இவர்களின் மூன்று குழந்தைகளான ரித்தி ராணி (7), பியூஷ் (4) மற்றும் ஒன்றரை வயதுடைய மற்றொரு மகள் ஆகியோர் அதே அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்தக் கொலை நடந்துள்ளது.

தாயின் அலறல் சத்தம் கேட்டு, ஏழு வயது மகள் ரித்தி ராணி எழுந்து சத்தமாகக் கதறியுள்ளார். அருகில் வசித்த ரூபேஷின் தாய் நன்வா தேவி சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறை முழுவதும் ரத்த வெள்ளமாகக் கிடப்பதையும், ஜலோ தேவி இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

குற்றவாளி கைது மற்றும் விசாரணை

இது குறித்துத் தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாகக் கொலையாளி ரூபேஷ் யாதவைப் பிடித்து, பொகாரோ காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பலியான ஜலோ தேவியின் உடல், உடற்கூறு ஆய்வுக்காகப் பொகாரோ சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.