Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

எலி மருந்து அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட பெண் காவலர்.. மன அழுத்தத்தால் விபரீதம்

By leninakathiya
04 Sep 2024, 03:28 AM
கடன் பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தால் எலி மருந்து அருந்திய பெண் காவலர் கடந்த 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுதப்படை பெண் காவலர் தங்கமீனா(28). இவர் சென்னை அயனாவரம் கே.எச் சாலை பாரதமாதா தெருவில் தனது தம்பி ஜெயராமன் மற்றும் நாத்தனார் கிருத்திகா உடன் வசித்து வந்தார்.‌ இவரது தாய், தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதர, சகோதரி ஆகியோர் திருச்சியில் வசித்து வருகின்றனர்.

மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்த காவலர் தங்கமீனா, 2021 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பிஆர்எஸில் பயிற்சி முடித்து எழும்பூர் புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார்.‌ தற்போது எழும்பூர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தங்கமீனாவுக்கு 5 லட்ச ரூபாயும் மற்றும் அவரது தம்பி ஜெயராமனுக்கு 5 லட்ச ரூபாயும் கடன் இருந்ததாக கூறப்படுகிறது‌. இதனால் பெண் காவலர் தங்கமீனா நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி இரவு வீட்டில் குளிர்பானத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்‌.

மறுநாள் காலை 28ஆம் தேதி வழக்கம் போல் நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கு சென்ற அவர், பணியின் போது வாந்தி எடுத்ததை பார்த்த  சக காவலர்கள், இது குறித்து கேட்டதற்கு, உடல் நலம் சரியில்லை என தங்கமீனா கூறியுள்ளார். மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில், மீண்டும் தங்கமீனா வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததை பார்த்த, அவரது சகோதரர் ஜெயராமன், அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் ‌‌. முதற்கட்ட விசாரணையில் ஆயுதப்படை பெண் காவலர் தங்கமீனா கடன் சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது‌‌. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கமீனா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.‌