Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி.... போலீசையே மிரள வைத்த சம்பவம்!

By nishika
06 Oct 2024, 03:10 PM
கணவரை கொலை செய்து உடலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், புளியரை அருகே உள்ள மேலப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 42). இவரது மனைவி மாயா (வயது 33). இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், சின்னத்துரை வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார். சின்னத்துரை விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னத்துரை வழக்கம்போல் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று (அக். 5) அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார். இதயடுத்து அவரது மனைவி மாயா, சின்னத்துரையின் உடலை ஆட்டோவில் எடுத்துக்கொண்டு புளியரை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், சின்னத்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையை சின்னத்துறையின் மனைவியான மாயாவிடம் தொடங்கினர்.

இந்த விசாரணையின்போது, சின்னத்துரை ரத்த காயங்களுடன் வீட்டு வாசல் முன்பு கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் இதனால் அச்சமடைந்து உடலே காவல்நிலையத்திற்கு வந்ததாகவும் மாயா தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் அளித்த பதிலானது முன்னுக்கு பின் முரணாக இருக்கவே, சந்தேகம் அடைந்த போலீசார் மாயாவை துருவி, துருவி விசாரித்தனர். அப்போது  மாயாவும் அவரது அண்ணனான மனு என்பவரும் சேர்ந்து சின்னத்துரையை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், உயிரிழந்த சின்னத்துரையின் உடலை ஆட்டோவில் ஏற்றி தென்காசி அருகே உள்ள அவரது உறவினர் ஒருவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று புதைத்து விடலாம் எனக்கூறி, அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், சின்னத்துரையின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல அறிவுருத்தியுள்ளார். இதன் பின்புதான் காவல் நிலையத்திற்கு சின்னதுரையின் உடலை எடுத்து வந்ததாக மாயா தெரிவித்தார். 

மேலும் படிக்க: விவசாயிகள் தவிப்பு.... ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் வைத்த கோரிக்கை!

இதைக்கேட்டு அதிர்ந்த போலிசார், அவர்கள் இருவரையும் கைது செய்து கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். கணவரை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் அவரது உடலை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து அவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என போலீசாரிடம் நாடகமாடிய மனைவி மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புளியரைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.