கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூற ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாகப் பலியாகினர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சித் தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டது.
அச்சமயத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். எனினும், விஜய் ஏன் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த இடத்திற்கே நேரில் சென்று சந்திக்கவில்லை என அப்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு, "திமுக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை; விஜய் அங்கு சென்றால் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்படும்" என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை, தற்போது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று, விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கரூரில் பலியானவர்களின் குடும்பங்களை அவர்களின் சொந்த ஊருக்கே சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக, வரும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அவர் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.