Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

‘இனி NO PARKINGக்கு NO சொல்லுங்க’.. அதிரடியாக உத்தரவிட்ட காவல் துறை!

By Kumudam News
24 Sep 2024, 03:33 AM
மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை: இந்தியாவில் பெரு நகரங்களில் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் எந்த அளவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளதோ, அந்த அளவுக்கு வாகனங்களை பார்க்கிங் (PARKING) செய்வதும் பெரும் தலைவலியாக உள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லும் இடத்தில் வாகனங்களை அப்படியே பார்க்கிங் செய்து விட்டு செல்கின்றனர். 

இதனால் சென்னையில் பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடங்கிய பகுதியில் நோ பார்க்கிங் (NO PARKING) என்ற அறிவிப்பு பலகை வைப்பது அதிகரித்து விட்டது. இப்படி சென்னையின் பெரும்பாலான இடங்களில் போலீசாரின் அனுமதியின்றி நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை வைப்பது, மண் பைகள், தடுப்புகளை வைப்பதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் அனுமதியின்றி  நோ பார்க்கிங்  அறிவிப்பு பலகை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘’சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி, நோ பார்க்கிங் பலகைகள். தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது. 

மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். 

அங்கீகரிக்கப்படாத இடங்களில் நோ பார்க்கிங் பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகனை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம்.  வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும். இந்த விதிமீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நகரம் முழுவதும் வழக்கமான சோதனைகளை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்கொள்ளும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.