Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

இருட்டு கடையை வரதட்சணையாக கேட்ட மருமகன்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் பரபரப்பு புகார்

By nagalekshmi
16 Apr 2025, 01:57 PM
இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் உலகப் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங் என்பவரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோயம்புத்தூரில் வசித்து வரும் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கோவையில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்த கனிஷ்கா தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் இது சம்பந்தமாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கனிஷ்கா தனது பெற்றோரிடம் கூறக் கூடாது என்றும் மீறி கூறினால் அவரை கொன்று விடுவதாக கணவர் பல்ராம் சிங் மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 15-ஆம் தேதி நெல்லை மாவட்டம் டவுனில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு கனிஷ்கா வந்த நிலையில் கணவர் பல்ராம் சிங் அவரது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தால் கொலை செய்வதாக மிரட்டியதுடன் கூடுதலாக வரதட்சணை கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், நெல்லையில் பிரதான அல்வா கடையாக இயங்கி வரும் இருட்டுக்கடையை அவரது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என கூறி மிரட்டி உள்ளார். சமூக வலைதளங்களில் தேவையற்ற அநாகரீகமான குறுஞ்செய்திகளை அனுப்புவதும் அதன் மூலம் அவர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த பல்ராம் சிங் மீது ஸ்ரீ கனிஷ்கா, முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் நெல்லையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்த கவிதா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் இதனால் கலங்கி போய் உள்ளனர்.