Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நண்பனைக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்: இரண்டு மாதங்களுக்குப் பின் கோவையில் இருவர் சரண்!

By Jayakumar
08 Aug 2025, 10:48 AM
கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாக, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். நெல்லையைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் ஆகிய இருவரும், தங்களது நண்பரான ஜெயராமனை கொலை செய்து கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டனர்.

சம்பவத்தின் பின்னணி

பாலமுருகனின் தந்தை, மலுமிச்சம்பட்டி அருகே உள்ள குதிரை பண்ணை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதனால் பாலமுருகன் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். நெல்லை சிறையில் இருந்தபோது, கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பாலமுருகனுக்கு, முருகப்பெருமாளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, முருகப்பெருமாள் தனது நண்பரான ஜெயராமனுக்கு கோவையில் வேலை தேடி வந்தார். அப்போது பாலமுருகனைத் தொடர்பு கொண்டு, ஜெயராமனுக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளார். பாலமுருகனின் அழைப்பின் பேரில், நெல்லையிலிருந்து இருவரும் மலுமிச்சம்பட்டிக்கு வந்துள்ளனர்.

கொலை நடந்தது எப்படி?

மலுமிச்சம்பட்டிக்கு வந்த மூவரும் பண்ணைக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது முருகப்பெருமாளுக்கும், ஜெயராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகப்பெருமாள், ஜெயராமனைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நண்பரின் திடீர் மரணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகனும் முருகப்பெருமாளும், ஜெயராமனின் உடலை மறைக்க முடிவு செய்தனர். உடலுடன் கல்லைக் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சரணடைதல் மற்றும் விசாரணை

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இருவரும் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்ததைக் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட ஜெயராமனின் உடலை மீட்க, கிணத்துக்கடவு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சுமார் 40 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றிலிருந்து உடலை மீட்க, தண்ணீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தேவையெனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.