தமிழ்நாடு

கால் டாக்ஸி விபத்து: தந்தை, கர்ப்பிணி உயிரிழப்பு-மதுபோதையால் நடந்த சோகம்

By Jayakumar
24 Jun 2025, 04:13 PM
சென்னையில் கால் டாக்ஸி விபத்தில் தந்தை மற்றும் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழப்பு. தாய் மற்றும் கார் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சென்னை மேடவாக்கம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி இந்து ராணி. இவர்களது மகள் தீபிகா. இவர் கர்ப்பமாக உள்ளார். நேற்றிரவு பத்மநாபன் தனது மனைவி, மகள் ஆகியோருடன் கால் டாக்ஸி ஒன்றில் போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் தந்தை, கர்ப்பிணி உயிரிழப்பு

கார் அனகாபுத்தூர் சீனிவாசபுரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் போது எதிர்புறத்தில் தவறான பாதையில் அதிவேகமாக வந்த மற்றொரு கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் காருக்குள் இருந்த பத்மநாபன், மனைவி இந்து ராணி, கர்ப்பிணி தீபிகா, கார் ஓட்டுனர் அம்பத்தூரைச் சேர்ந்த புவனேஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பத்மநாபன் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் தீபிகா மேல் சிகிச்சைக்காக வானகரம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

கார் ஓட்டுநரிடம் விசாரணை

மேலும் இந்து ராணி, கார் ஓட்டுநர் புவனேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மணிகண்டனுக்கு காயம் எதுவும் இல்லை. அவரை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.