Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஒலிம்பியாட் போட்டிகளில் முன்னிலை பெற்றால் சிறப்பு ஒதுக்கீடு.. சென்னை ஐஐடி திட்டம்

By nagalekshmi
11 Mar 2025, 09:48 AM
அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை சென்னை ஐஐடி வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அறிவியல் சார்ந்த பிரிவுகளில் மாணவர்களின் திறன்களை சோதிக்கும் போட்டிகள் சயின்ஸ் ஒலிம்பியாட் எனப்படுகின்றன. இத்தகைய போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐஐடியில் பயில்கின்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்படும் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தகவலியல் ஆகிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பி.டெக். படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் புதிய நடைமுறையை சென்னை ஐஐடி வரும் 2025-26-ம் கல்வி ஆண்டில் அமல்படுத்த உள்ளது.

மேலும் படிக்க: தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு, கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு போல அறிவியல் ஒலிம்பியாட் பிரிவிலும் ஒவ்வொரு படிப்பிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும். அதில் ஒரு இடம் பிரத்யேகமாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கை, ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு முறையின்கீழ் வராது. இதற்கு தனி சேர்க்கை நடத்தப்படும். வரும் 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான பதிவு ஜூன் 3-ம் தேதி தொடங்கும். ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை https://ugadmissions.iitm.ac.in/scope என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.