Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பெண் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோ: நீலகிரி எஸ்பி அலுவலக உதவியாளர் கைது!

By Christon
22 Nov 2025, 05:09 PM
உதகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்களையும், படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய குற்றத்திற்காக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில், பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்குத் தொடர்ந்து ஆபாச வீடியோக்களையும், படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய குற்றத்திற்காக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அங்கு போலீசாருக்குப் பயணப்படிக்கான ரசீது ஒதுக்கி பணம் கொடுத்தல் உள்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை இவர் செய்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் வெளி மாவட்டத்திற்குச் சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையைத் தர வலியுறுத்தி நீலகிரியில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவர் இவரிடம் விண்ணப்பத்துடன் ரசீதுகளைக் கொடுத்தார். அதில், அந்த ஆய்வாளரின் தொடர்பு எண்ணையும் அவர் பதிவு செய்திருந்தார்.

குறுஞ்செய்தி மற்றும் கைது நடவடிக்கை

ஆய்வாளரின் தொடர்பு எண்ணைக் குறித்துக்கொண்ட முருகன், பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண் ஆய்வாளரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு 'குட் மார்னிங்', 'குட் நைட்' எனத் தொடர்ச்சியாகக் குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். புதிய எண்ணாக இருந்ததால் ஆய்வாளர் எந்தப் பதிலும் திருப்பி அனுப்பாமல் இருந்துள்ளார். அடுத்த ஒரு சில வாரங்களில் பெண் ஆய்வாளரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு முருகன் ஆபாசப் படங்களையும், வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஆய்வாளர், இது குறித்து நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து உதகை ஊரக காவல் ஆய்வாளர் கமலேஸ், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி, இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனர். இதன் பின்னர் அவரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

போலீஸ் விளக்கம் மற்றும் விசாரணை

இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த முருகன் சபல புத்தியில் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை அனுப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு யாருக்கும் இதுபோல் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் அனுப்பியுள்ளாரா என்பது குறித்தும், இதற்கு முன்னர் பணியாற்றிய இடங்களில் இதுபோல் சம்பவம் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.