தமிழ்நாடு

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி கொடூரக் கொலை.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

By Christon
19 Nov 2025, 10:53 AM
ராமேஸ்வரம் அருகே காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே காதலை ஏற்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையைச் செய்த இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சேராங்கோட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் (20) என்ற இளைஞர், அந்த மாணவியை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

கொடுரக் கொலை மற்றும் சரண்

இளைஞர் முனிராஜின் காதலை மாணவி தொடர்ந்து மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ், மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் அவரது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி சென்ற மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியைக் கொலை செய்த முனிராஜ், பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.