Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகும் வேலை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

By nagalekshmi
25 Feb 2025, 06:23 PM
கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர் பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.

மேலும் படிக்க: சுழற்சி முறையில் பல்கலைக்கழக துறைத்தலைவர் நியமனம்.. நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாததிற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்தது மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.