தமிழ்நாடு

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை

By MUTHUKRISHNAN
22 May 2025, 12:26 PM
ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அதிவிரைவு ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த ரயிலில் பயணம் செய்த சிலரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பின்தொடர்ந்தது கண்காணித்து வந்தனர்.

ரூ.32 லட்சம் ஹவாலா பணம்

எழும்பூர் ரயில் நிலையம் வந்ததும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர் ரயிலில் பயணம் செய்த சென்னை பெரம்பூர் பட்டாளம் பகுதியை சேர்ந்த அசோக் ஜெயின், அவரது மகன் சில் அசோக் ஜெயின் மற்றும் சவுக்கார்பேட்டை பகுதியை சேர்ந்த சங்கீதா ஆகியோரின் உடமைகளை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக 32 லட்ச ரூபாய் ஹவாலா பணம் இருப்பதை கண்டு பிடித்தனர்.

மேலும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மூவரையும் எழும்பூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக இவர்கள் பணத்தை எங்கிருந்து எதற்காக கொண்டு வந்தனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.