தமிழ்நாடு

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு.. 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொள்ளையன்!

By VASUKI
19 May 2025, 11:56 AM
நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் கடந்த 21 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொள்ளையன் முனுசாமி. இவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையன் முனுசாமியை கைது செய்துள்ளனர்.

கைதான கொள்ளையன் முனுசாமி மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது திருமுல்லைவாயல், ஜெஜெ நகர், தலைமைச் செயலக காலனி, ஆவடி, மதுரவாயல் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சுமார் 20 வழக்குகள் இருக்கிறது. குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்தது இந்த முனுசாமி தான்.

இவர் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 21 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது திருமுல்லைவாயல் போலீசார் கைது செய்துள்ளனர். பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.