தமிழ்நாடு

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. 4வது நாளாக கடலுக்கு செல்லாத நாட்டு படகு மீனவர்கள்!

By VASUKI
27 May 2025, 04:40 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடல் பகுதியில் பேரலைகள் எழ வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், கீழ மணக்குடி, மேல மணக்குடி, கோவளம், புதுகிராமம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 37.87 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் 42.55 அடியாவும் உயர்ந்துள்ளது. அதேபோல், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 5.58 அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 5.67 அடியாகவும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 1497 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 1081 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

தொடர் கனமழை காரணமாக கோதையாற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தண்ணீர் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அதிகமாக தண்ணீர் விழும் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் குளிக்கும் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.