Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கசிந்தது ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம்: இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

By VASUKI
15 Aug 2025, 12:36 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவன கூலி திரைப்படம், உலகம் முழுவதும் வெளியான சில மணிநேரங்களிலேயே சட்டவிரோதமாகப் பல்வேறு இணையதளங்களில் கசிந்துள்ளது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் உருவான திரைப்படம் கூலி நேற்று, ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம், ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கூலி திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தப் படத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே போன்ற பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்துள்ளனர்.

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே, 'கூலி' திரைப்படம் இணையத்தில் கசிந்தது, படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தை இணையத்தில் வெளியிடுவதற்குத் தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், இந்தச் சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'கூலி' படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. ஆனால், படம் வெளியான பிறகு, அதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஒருபுறம் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் சில விமர்சகர்கள் படத்திற்கு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, 'கூலி' சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாவதை தடுக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி, படம் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்கள் மற்றும் பைரசி இணையதளங்களில் முழுமையாகக் கசிந்துள்ளது. இந்தச் சம்பவம், தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

சட்டவிரோதமான இணையதள இணைப்புகளை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை காவல் துறை துரிதப்படுத்தியுள்ளது. இது போன்ற திருட்டுக் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

பைரசிக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது, திரையுலகினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.