தமிழ்நாடு

Rain Alert: தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
16 Dec 2025, 02:00 PM
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் (நவம்பர்) இறுதியில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. நேற்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (டிச.17) மற்றும் நாளை மறுநாள் (டிச.18) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.