Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பி.எஸ்.4 வாகன மோசடி: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By VASUKI
05 May 2025, 01:52 PM
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ். 4 வாகனங்கள், 2020ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சென்னையைச் சேர்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், தமிழகத்தில் பி.எஸ். 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத் ராஜா, பி.எஸ். 4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகள் தவறிழைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூன் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.