Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மாநகர பேருந்தை கடத்தி விபத்து ஏற்படுத்திய நபரால் பரபரப்பு.. அதிரடி காட்டிய போலீசார்

By nagalekshmi
13 Feb 2025, 11:22 AM
திருவான்மியூர் பணிமனையில் இருந்து மாநகரப் பேருந்தை கடத்தி விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை இசிஆர் சாலை அக்கரை சோதனைச் சாவடி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மாநகர பேருந்து ஒன்று லேசாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர், குடிபோதையில் மாநகர பேருந்தை இயக்கி செல்வதாகவும் இதனால் பல விபத்துக்கள் நேரிட கூடும் என நீலாங்கரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து சென்றுள்ளார்.

உடனடியாக நீலாங்கரை போலீசார் ரோந்து வாகனத்தில் மாநகர பேருந்தை பிடிக்கச் சென்ற போது, ஒரு நபர் மாநகர பேருந்தை நிறுத்திவிட்டு சீட்டில் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

மேலும் படிக்க: மீண்டும்.. மீண்டுமா..? முதலமைச்சர் செல்லும் சாலையில் வெடிகுண்டு  வைப்போம் என மிரட்டல்

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்நபர பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் என்பது தெரியவந்தது. 38 வயதான இவர் கூடுவாஞ்சேரியில் கார் டெக்னீசியனாக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், நேற்று (பிப். 12) காலை, வேலைக்கு செல்வதற்காக ஆபிரகாம் மாநகர பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது பேருந்து நடத்துநர் ஆபிரகாமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆபிரகாம் நேற்று (பிப். 12)  இரவு குடிபோதையில் திருவான்மியூர் பணிமனை அருகே படுத்து உறங்கியுள்ளார். பின்னர் நள்ளிரவு நேரம் திருவான்மியூர்  பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த 109 எண் கொண்ட மாநகர பேருந்தை கடத்திக்கொண்டு இசிஆர் வழியாக சென்றபோது விபத்து ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடத்துநருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்காக பேருந்தை கடத்திக் கொண்டு சென்ற ஆபிரகாமை திருவான்மியூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.